கவலையுற்ற நெஞ்சம்
தனக்கு இராமனால் வாலியை வதைத்து அளிக்கப்பட்ட அரசை ஆண்டுகொண்டு
சுகபோகத்தில் ஆழ்ந்திருந்தான் சுக்ரீவன். தான்
கொடுத்த வாக்குறுதியை மறந்தான். வானரர்களைக்
கொண்டு, சீதையைக் கண்டுபிடிப்பதாகச் சொன்ன சுக்ரீவன், இதுநாள் வரையில் மனைவியைப் பிரிந்து,
உயிருக்குப் பயந்து காட்டிலும் மேட்டிலும் அலைந்த நிலையைச் சிறிதும் எண்ணவில்லை. அவன்,
தன் அண்ணியும், வாலியின் மனைவியான தாரையையும்
தன் மனையாட்டி ஆக்கி, அனுமன் போன்ற நல்ல அமைச்சர்கள் இருக்க, தான் அரசன் என்ற நினைவின்றி,
எப்பொழுதும் மதுவில் மூழ்கிக் கிடந்தான். உறுதியளித்த
நான்கு மாதங்கள் கடந்த பின்னும், கார்காலம்
கழிந்த போதும், வானரப்படையை வரவழைக்க எந்த முயற்சியும் செய்வதாக இராமனுக்குத் தெரியவில்லை.
மனம் வெறுத்த இராமன், லக்ஷ்மணனிடம் தன் மனக்கஷ்டத்தைப் பகிர்ந்து
கொண்டான். ‘மழைக்காலத்தில் சீதையில்லாமல் மிகவும்
வருந்தினேன். என் நெஞ்சம் கவலையுற்றுருக்கிறது.
எப்போது சீதையைக் காண்பேன் என்பது தெரியவில்லை. சுக்ரீவன் மனைவியைப் பிரிந்த ஒரே காரணத்திற்காக,
வாலியைக் கொன்று, அவன் பால் என் கருணையைச் செலுத்தினேன். நான் இங்கு மனைவியின்றி துயருற்றிருக்க சுக்ரீவன்
அரச இன்பங்களைத் துய்த்து மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறான். என் துன்பம் அவனுக்குத் தெரியவில்லை. முன்னம் அவன் பட்ட துன்பத்தை அல்லவா நான் இப்பொழுது
அனுபவிக்கிறேன்.
இராமன் லக்ஷ்மணனிடம்,
சுக்ரீவனின் மனதில் தைக்கும்படியாக, எடுத்துச் சொல் என்றவுடன், லக்ஷ்மணனின் நெஞ்சம் கவலையுற்றது. இராமன், லக்ஷ்மணனிடம் சொன்னதாக வால்மீகி,
शुभं वा यदि वा पापं
यो हि वाक्यमुदीरितम् ।
सत्येन परिगृह्णाति
स वीरः पुरुषोत्तमः ॥
(வா. ராமா., கிஷ்கிந்தா காண்டம், 30 ஸர்கம் 40 ஶ்லோகம்)
நன்மையோ, தீமையோ சொன்ன
சொல் மீறாதவன் உத்தமன், என்று எழுதியுள்ளார்.
இதையே கம்பன்,
நன்றி கொன்று அருநட்பினை
நார் அறுத்து
ஒன்று மெய்ம்மை சிதைத்து
உரை பொய்த்துளான்
கொன்று நீக்குதல்
குற்றத்தின் நீங்குமால்
சென்று மற்றவன் சிந்தையைத்
தேர்குவாய்.
(கம்ப. ராமாயணம்,
கிஷ்கிந்தா காண்டம், கிட்கிந்தைப் படலம், செய்யுள் 3)
வால்மீகி ராமாயணத்தில்,
லக்ஷ்மணன், இராமன் படும் துயர் கண்டு,
‘न धारये कोपमुदीर्णवेगात्
निहन्मि सुग्रीवम् असत्यम् अद्य’
மேலெழுந்த கோபத்தை அடக்க மாட்டேன். வாக்கு தவறிய சுக்ரீவனைக் கொல்வேன் என்கிறான். இராமனோ அவனை சாந்தப்படுத்த ‘கோபத்தை வெல்பவனே வீரன்’
என்று சொல்லி அனுப்புகிறான். லக்ஷ்மணன் வந்த
செய்தி கிஷ்கிந்தைக்குள் பரவியது.
துணுக்குற்ற தாரையின் மனதில் முன் நடந்தவை நிழலாடின.
முன்னர், இராமன் சுக்ரீவனுடன் சேர்ந்து கிஷ்கிந்தைக்கு அருகே
சென்று, சுக்ரீவனை வாலியை சண்டைக்கு அழைக்குமாறு பணிக்கிறார். வெளியே வந்த வாலி சுக்ரீவனை நன்கு புடைத்து விரட்டி
விடுகிறான். இராமனை நம்பி வந்த சுக்ரீவனின்
நெஞ்சம் கவலையுற்றது. அவனுடைய கலக்கத்தைப் போக்கி, இராமன் மீண்டும் சண்டைக்கு
போகுமாறு தூண்டுகிறான்.
அவ்வாறு, சுக்ரீவன் மீண்டு வந்ததைக் கேள்விபட்ட வாலியின்
மனைவியான தாரையின் நெஞ்சம் கவலையுற்றது. அவள், வாலிக்கு அறிவரை கூறுகிறாள். அதை மதியாமல், வாலி, மற்போர் புரிய வருகிறான். இராமனின் அம்பால் வீழ்த்தப்பட்டு கிடக்கிறான்.
இந்த நிலையை அருணகிரிநாதர், ‘மானை விடத்தை’ என்று ஆரம்பிக்கும்,
திருவண்ணாமலைத் திருப்புகழில், இராமன், வழியிலிருந்த மரங்களின் பின் ஒளிந்திருந்து,
மாவீரனான, வாலியின் மார்பில் அம்பு செலுத்தி, தாரையையும் சுக்ரீவனுக்கு உரிமையாக்கியவன்
எனப் பாடுகிறார்.
‘சாலை மரத்துப் புறத்தொளித்து
அடல்
வாலி உரத்தில் சரத்தை விட்டொரு
தாரைதனைச் சுக்ரீவற்கு அளித்தவன்
வாலி, என்மேல்
மறைந்திருந்து அம்பு செலுத்தியவன் யார் என தன் மார்பில் தைத்திருந்த சரத்தைப் பிடுங்கிப்
பார்க்க, அதில் இராமனின் நாமத்தைக் கண்டான்.
அவன் நெஞ்சம் கவலையுற்றது. அவ்வாறு
தன்னை மறைந்திருந்துக் கொல்லக் காரணம் என்ன என வாலி இராமனிடம் வினவ, இராமன், நீ
தம்பியின் மனைவியைக் களவாடியவன். உன்னிடம்
அதர்மம் தலைவிரித்து ஆடுகிறது. உன்னை எப்படி
கொன்றால் என்ன? என்றான். அதற்கு வாலி நாங்கள்
குரங்குகள் அல்லவா? மனைவி விஷயத்தில் எங்களுக்கு நியதி இல்லை. ஆகையால், சுக்ரீவன் மனைவியான ருமையை நான் அடைந்ததில்
எந்த தோஷமும் இல்லை என்றான். அவன் கூற்றை ஒப்புக்கொண்ட
இராமன், நீயோ விலங்கு. விலங்கான உன்னை நேர் நின்று கொல்ல வேண்டியதில்லை. வேட்டைக்காரன், வேட்டையாடும்போது, எந்த விலங்கையும் அதன் முன் எதிர்த்து நின்று கொல்லமாட்டான். நானும் அவ்வாறே செய்தேன் என்றான். இதே கோணத்திலேயே, சுக்ரீவன் வாலியின் மனைவியும்
தன் அண்ணியுமான தாரையை மனையாட்டி ஆக்கிக் கொள்ள இராமனிடமிருந்து எந்த எதிர் வினையும்
இல்லை.
இவ்வாறு முன் நடந்ததை
நினைத்துப் பார்த்த தாரை, தற்போதைய நிலையில் தான் செய்ய வேண்டியதைப் பற்றி ஆலோசிக்கலானாள்.
வானர கிஷ்கிந்தைக்கு, லக்ஷ்மணன் வந்தபோது, சுக்ரீவனோ மதுபோதையில் மதியிழந்து கிடக்கிறான். லக்ஷ்மணனோ, கோபத்துடன் வில்லேந்தி வருகிறான். அங்கதன்
சுக்ரீவனுக்கு இதை உரைக்க, மது மயக்கத்திலிருந்த சுக்ரீவன், தன்னிலை மறந்தவனாக அதை
உணரவில்லை. அனுமன் முதலானோர், தாரையிடம் சென்று விவரத்தைக் தெரிவிக்கிறார்கள். தாரை லக்ஷ்மணனை எதிர்கொண்டு அழைக்க தோழியர் புடைசூழ
வருகிறாள். அவள் நிலையை வர்ணிக்கும் கம்பன்,
மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தோடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான்.
(கம்ப. ராமா., கிஷ்கிந்தா காண்டம்,
கிட்கிந்தைப் படலம், செய்யுள் 51)
என்று தாரை மங்களப் பொருட்களை நீக்கி,
விதவைக்கோலம் பூண்டு இருந்ததாகக் கூறுகிறான்.
தாரையின் கோலம் லக்ஷ்மணக்குத், தன் தாய்மாரை நினைவூட்டியது. அவன் கோபம் தணிந்தது.
அவன் நெஞ்சம் கவலையுற்றது. அவன் வருந்தினான். இதே நிகழ்வை, வால்மீகியோ,
सा प्रस्खलन्ती मदविह्वलाक्षी प्रलम्बकांचीगुणहेमसूत्रा
।
सलक्षणा लक्ष्मणसन्निधानं जगाम तारा
नमिताङ्गयष्टिः ॥
(கிஷ்கிந்தா காண்டம், ஸர்கம் 31, ஶ்லோகம்
52)
என்று தாரையும் மதுவால் சுழலும் கண்களுடனும், தள்ளாட்டத்துடனும் வந்ததாக எழுதியுள்ளார். வால்மீகியோ உள்ளதை உள்ளபடி எழுதுவார். கம்பனோ, தமிழ்
கூறும் நல்லுலகத்திற்கேற்ப ஆங்காங்கு சிலவற்றை மாற்றி அமைத்துள்ளான். அவற்றில் ஒன்று இது.
தாரை லக்ஷ்மணனைச் சாந்தப்படுத்த, நீண்ட நாள் கஷ்டப்பட்டதால், சுக்ரீவன், தற்சமயம்,
கிடைத்திருக்கும் அரச சுகங்களில் ஈடுபாடு உடையவனாக இருப்பதில் பெரியோனான நீ கோபம் கொள்ளலாகாது.
‘न कामतन्त्रे तव बुद्धिरस्ति त्वं वै यथा मयुवशं प्रपन्नः ।‘
(வா. ராமா., கிஷ்கிந்தா காண்டம், 33 ஸர்கம், 55 ஶ்லோகம்)
தங்களுக்கு காம இன்பத்தில் நாட்டமில்லை.
ஆகையால், கோபன் கொண்டீர். படை திரட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காலதாமதத்தைப் பொறுத்து அருள வேண்டும். இப்போதே சுக்ரீவனின் இருப்பிடத்திற்கு அழைத்துச்
செல்கிறோம். உமது வார்த்தைகளைக் கேட்க, அவர்
எப்பொழுதும் சித்தமாக இருக்கிறார்.
சுக்ரீவனின் அரசவையை அடைந்த லக்ஷ்மணன், நீ செய்நன்றி கொன்றவன். எல்லாக் குற்றங்களுக்கும்
பரிகாரமாகப் பிராயச்சித்தம் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், செய்நன்றி மறந்தவனுக்கு இல்லை.
‘निष्कृरिर्विहिता सद्भिः कृतघ्ने नास्ति निष्कृतिः ।‘
(வா. ராமா., கிஷ்கிந்தா காண்டம், 34 ஸர்கம்,12 ஶ்லோகம்)
இதைக் கேட்ட சுக்ரீவனின் நெஞ்சம் கவலையுற்றது., அவன், காலம் கடந்தமைக்கு
மிகவும் வருந்துகிறேன். சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பொறுப்பது பெரியோரின் கடன். இவ்வுலகில்,
‘न कश्चिन्नापराध्यति ।‘
(வா. ராமா., கிஷ்கிந்தா காண்டம், 36 ஸர்கம்,11 ஶ்லோகம்)
எந்த ஒருவனும் சிறு பிழையேனும் செய்யாமலிரான். என் இந்த சிறிய குற்றத்தை மன்னிப்பாயாக. இராமன் இருக்குமிடத்திற்குப் போவோம். வானரப் படைகளும் அங்கு வந்து சேரும் என்று கூறினான். லக்ஷ்மணனின் மனம் இளகியது. அவன் சுக்ரீவனைப் பார்த்து அரசனான உன்னிடம், இப்படிப்பட்ட
கடின வார்த்தைகளைப் பேசியதற்காக வருந்துகிறேன்.
இராமனின் துக்கம் என்னை அப்படி பேச வைத்தது.
‘यस्य शोकाभिभूतस्य शृत्वा रामस्य भाषितम् ।
मया त्वं परुषाणि उक्तः तत् च त्वं क्षन्तुम् अर्हसि ॥‘
(வா. ராமா., கிஷ்கிந்தா காண்டம், 36 ஸர்கம்,21 ஶ்லோகம்)
இப்படி ஒருவருக்கொருவர், நிலையை எண்ணி, நெஞ்சில் கவலையுற்று, நட்பு பாராட்டினால்,
இவ்வுலகில் ஸமதர்ம ஸகோதரத்வம் பெருகி எல்லோரும் இன்புற்று இருக்கலாம்.
No comments:
Post a Comment